• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Director Speaks

மரியாவின் நம்பிக்கை வாழ்வு நம் வாழ்வாகட்டும்

Wednesday, May 1, 2024

 

இறையேசுவில் பிரியமானவர்களே,

 

மே மாதம் என்றாலே அன்னை மரியாளின் மாதம். இதை சிறப்பாய் கொண்டாட திருஅவை நம்மை அன்போடு அழைக்கின்றது. இம்மாதத்தில் அன்னை மரியாளின் பக்தியானது உலகமெங்கிலும் பக்தி பாசத்துடனும், நம்பிக்கையுடனும் உற்சாகமாக, கொண்டாடப்பட்டு வருகிறது. இக்கொண்டாட்டம் ஒவ்வொரு பங்கிலும் ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் செபமாலையுடன் கூடிய திருப்பலியும், தேர்பவனியும், சிறப்பு மறையுறைகளும் அன்னை மரியாளின் புதுமைகளை நினைவுக் கூர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. அன்னை மரியாளை குடும்பமாகவும், அன்பியங்களாகவும், தங்களின் பங்குகளில் வரவேற்று அவரின் புகழ்பாடி அவரை வணங்கி, செபித்து, சிறப்பு செய்ய இவ்வணக்க மாதத்தை நாம் வரவேற்று சிறப்பு செய்வோம்.

 

பாரம்பரியமிக்க இவ்வணக்கமாதா பக்தி முயற்சி, 13ம் நூற்றாண்டில் துவங்கியது. பொதுவாக தொடக்கக் காலத்தில் கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவர்களல்லாதவர்களால் கொண்டாடப்பட்ட ஒரு பொது விழாவை, கிறிஸ்தவர்கள் பிற்காலத்தில் இப்பொதுவிழாவைத் தழுவிக்கொண்டு இந்த பொது கொண்டாட்டத்தை மரியன்னையின் வணக்க மாதமாகக் சிறப்பித்துக், கொண்டாடி வந்தார்கள். 18ம் நூற்றாண்டில் இந்த வணக்கமாதா கொண்டாட்டம், குறிப்பாக இயேசு சபையினரிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கியது. பிறகு இந்த பக்தி கொண்டாட்டம் உலகமெங்கும் பரவியது. 

 

வணக்க மாதத்தில் மரியன்னை பக்தி முயற்சி பல திருத்தந்தையர்களால் ஊக்குவிக்கப்பட்டது. திருத்தந்தை பதினோராம் பத்திநாதர், திருத்தந்தை ஆறாம் சின்னப்பர், மற்றும் புனித இரண்டாம் ஜான்பால் போன்றோர்களால் இப்பக்தி முயற்சி புகழ்பெற்று மிகுந்த மகிழ்வுடனும், நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும், மரியன்னையை புகழ்ந்துப்பாடி, செபித்து, அவரை பெருமைப்படுத்தி, வணங்கி கொண்டாடியது.

 

நமது அன்னை மரியாளின் எடுத்துக்காட்டான வாழ்வும், அவரின் அர்ப்பண வழிகாட்டுதலும், சிறப்பாக அவர் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்து, தூய ஆவியின் வல்லமையால் கடவுளின் சித்தப்படி நடந்து நமக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும், தூண்டுதலாகவும் இருக்கின்றார். மரியன்னையின் வணக்க மாதா பக்தி முயற்சி குறிப்பாக பாஸ்கா காலத்திலும், தூய ஆவியாரின் வருகை காலத்திலும் அதிலும் சிறப்பாக திருமுழுக்கு, உறுதிபுசுதல், நற்கருணை போன்ற அருட்சாதனங்களால் மரியன்னையின் பக்தி சிறப்பானதாக உணர்ந்துக் கொண்டாடப்படுகிறது. எனவே, இவ்வன்னைக்கு செபமாலை செய்து, பாடல்பாடி, தேர்பவனியில் கலந்துக்கொண்டு, திருப்பலியில் பங்கேற்று இம்மாதத்தை வணக்கத்துடன் கொண்டாட நம்மை அழைக்கிறது. 

 

இறுதியாக திருத்தந்தை ஆறாம் சின்னப்பர் சொல்வதுபோல வணக்கமாதம் அருளின் மாதம், கடவுளின் அருட்கொடைகளையும், இரக்கத்தையும், அன்பையும் கொண்டாடும் மாதம். மரியன்னையை நாம் கொண்டாடுவதிலும் அவள் புகழ் பாடுவதிலும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை கொண்டாடி, அவர் புகழ்பாடி நம் அன்னையை மகிழ்விப்போம்.

 

என்றும் அன்புடன்
அருட்பணி. ஜேசுதாஸ் ச.ச.
இயக்குநர் - தீபகம்

 


Post a comment

Please Sign in or Sign up to leave a comment.

0 Comment(s)

 

No Comments!

 

 


Share: