• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இன்றைய இறைமொழி. சனி, 4 மே 2024. மாசிதோனியாவுக்கு வாரும்!

Saturday, May 4, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Gospel இன்றைய இறைமொழி Easter Season Eastertide

இன்றைய இறைமொழி
சனி, 4 மே 2024
பாஸ்கா காலம் 5-ஆம் வாரம் – சனி
திருத்தூதர் பணிகள் 16:1-10. யோவான் 15:18-21

 

மாசிதோனியாவுக்கு வாரும்!

திருத்தூதர் பணிகள் நூலை வாசிக்கும்போதெல்லாம் தொடக்கத் திருஅவையில் இருந்த உயிரோட்டத்தை மிக எளிதாக நம்மால் உணர்ந்துகொள்ள முடியும்.

 

இன்றைய முதல் வாசகத்தில் இரண்டு முக்கியமான நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒன்று, எபேசு திருஅவையின் முதல் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்ட (பின்னர்) திமொத்தேயு என்னும் இளவல் பவுலோடு பணியில் கைகோர்க்கின்றார். அவருடைய தாய் யூதப் பெண், தந்தையோ கிரேக்கர். இருந்தாலும், மற்ற யூதர்களை மனத்தில் கொண்டு அவருக்கு விருத்தசேதனம் செய்விக்கின்றார் பவுலு;. இங்கே நாம் ஒரு கேள்வியைக் கேட்கலாம். புறவினத்தார் விருத்தசேதனம் செய்துகொள்ளத் தேவையில்லை என எருசலேம் வரை சென்று வாதிட்ட பவுல், இங்கே திமொத்தேயுவுக்கு ஏன் விருத்தசேதனம் செய்விக்கின்றார்? மிகவும் எளிதான பதில். தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பதற்காக பவுல் இந்த முடிவு எடுக்கின்றார். இதுதான் மனம் சார்ந்த முடிவு. பவுல் தன் பணியில் அறிவுசார்ந்த விதத்தில் மட்டுமே செயல்படவில்லை. தேவையற்ற விவாதங்களையும் சொற்போர்களையும் தவிர்ப்பதற்காக அவ்வப்போது தன் உறுதிப்பாட்டோடு சமரசம் செய்துகொள்ளவும் தயாராக இருக்கின்றார். இதுதான் மேய்ப்புப் பணி அறிவு. பணிக்கும் பணியின் மக்களுக்கும் ஏற்றவாறு தன் திட்டங்களையும் செயல்களையும் மாற்றிக்கொள்வது.

 

இரண்டாவது நிகழ்வு, பவுல் காண்கின்ற காட்சி.

பவுல் அங்கு இரவில் ஒரு காட்சி கண்டார். அதில் மாசிதோனியர் ஒருவர் வந்து நின்று, ‘நீர் மாசிதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யும்’ என்று வேண்டினார். இக்காட்சியைப் பவுல் கண்டதும், நாங்கள் மாசிதோனியருக்கு நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்று கடவுள் தீர்மானித்துள்ளார் என எண்ணி, அங்குச் செல்ல வழி தேடினோம் –

 

இந்நிகழ்வை இப்படித்தான் பதிவு செய்கின்றார் லூக்கா. இதற்கு முன்னதாக, ‘ஆசியாவில் (ஆசியாக் கண்டம் அல்ல!) இறைவார்த்தையை அறிவிக்காதவாறு தூய ஆவியார் தடுக்கவே’ என்றும் பதிவிடுகின்றார் லூக்கா.

 

திருத்தூதர்களும் தொடக்கத் திருஅவை நம்பிக்கையாளர்களும் தூய ஆவியாரால் முழுவதுமாக இயக்கப்படுகின்றனர். ஆவியின் செயல்பாட்டை எளிதாக உணர்ந்துகொண்டு அதற்கேற்ப செயலாற்றுகிறார்கள். பவுல் காட்சி கண்டாலும் அந்தக் காட்சியைக் கடவுளின் கண் கொண்டே பார்க்கின்றார்.

 

இரண்டு விடயங்கள் இங்கே நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை:

(அ) திருத்தூதர் பணிகள் நூலில் கடவுள் தன்னைப் பல்வேறு நிலைகளில் நம்பிக்கையாளர்களுக்கு வெளிப்படுத்துகின்றார்: காட்சி, கனவு, உள்ளுணர்வு, உருவகம், மற்றவர்களின் வார்த்தைகள். கடவுள் எப்படித் தன்னை வெளிப்படுத்தினாலும் அவற்றில் கடவுளைக் காண அவர்கள் கற்றிருந்தனர். இதுதான் முக்கியம்.

 

இன்று இந்தப் பிரபஞ்ச உள்ளுணர்வு நம்மில் வேகமாக மறைந்து வருகின்றது. அமைதியிலும், சலனமற்ற நிலையிலும்தான் பிரபஞ்சத்தோடு நம் உள்ளுணர்வை இணைத்துக்கொள்ள முடியும். இன்று நம்மைச் சுற்றி எழும் சத்தங்கள், நம் உள்ளத்தின் பயங்கள், கோபம், குற்றவுணர்வு, தாழ்வு மனப்பான்மை போன்ற எதிர்மறை உணர்வுகள் ஆகியவை உள்ளுணர்விலிருந்து நம்மைத் தள்ளி வைக்கின்றன. அல்லது உள்ளுணர்வை நாம் அறியாத வண்ணம் செய்துவிடுகின்றன.

 

கடவுள் இன்றும் நம் உள்ளுணர்வு வழியாக நம்மைத் தொடர்ந்து உந்தித் தள்ளிக்கொண்டிருக்கின்றார். அதைச் சரியாகக் கண்டுகொள்ள சலனங்கள் தவிர்க்க வேண்டும்.

 

பழைய ஏற்பாட்டில், சாராவிடமிருந்து தப்பி ஓடுகிற பணிப்பெண் ஆகாரை பாலைநிலத்தில் ஆண்டவராகிய கடவுளின் தூதர் எதிர்கொள்கிறார். வாசகராகிய நமக்குத் தெரியும் அவர் ஆண்டவரின் தூதர் என்று. ஆனால், ஆகார் எப்படி அறிந்துகொண்டார்? தன் உள்ளுணர்வால். ஆகையால்தான், ‘என்னைக் காண்பவரை நானும் இங்கே கண்டேன்’ என்று அந்த நிகழ்வில் கடவுளின் இருத்தலைக் காண்கிறார் (காண். தொநூ 16:13).

 

மேலும், ‘நீங்கள் வலப்புறமோ, இடப்புறமோ எப்பக்கம் சென்றாலும் ‘இதுதான் வழி, இதில் நடந்து செல்லுங்கள்’ என்னும் வார்த்தை உங்கள் பின்னிருந்து உங்கள் செவிகளில் ஒலிக்கும்’ (எசா 30:21) என்னும் இறைவார்த்தைப் பகுதியும் உள்ளுணர்வு பற்றியே பேசுகிறது.

 

(ஆ) இரண்டு வகை நற்செய்திப் பணி. முதல் வகையில், தாம் விண்ணேற்றம் அடையுமுன் தம் சீடர்களுக்கு நற்செய்தி அறிவிப்புப் பணி கட்டளை கொடுக்கிற இயேசு, ‘உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்’ (காண். மாற் 16:15) என அனுப்புகிறார். எங்கே செல்ல வேண்டும் என்று இடத்தை இயேசு வரையறுக்கவில்லை. இங்கே, சீடர்களே பணி முதன்மைகளை வரையறுத்து பணி செய்ய வேண்டும். இரண்டாம் வகையில், கடவுள்தாமே ஏதோ ஓர் ஊடகம் வழியாக – உள்ளுணர்வு, மனிதர்கள், கனவு, ஆலோசனைக் கூட்டம் – ‘மாசிதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யும்’ – என்று நம்மை அழைக்கிறார். நாம் செல்ல வேண்டிய மாசிதோனியா எது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். சில நேரங்களில் நாமாகவே, ‘இதுதான் நாம் செல்ல வேண்டிய இடம்!’ என முடிவெடுக்கிறோம். தூய ஆவியார் நம்மை அங்கே செல்ல விடாமல் தடுத்துவிடுகிறார்.

 

பவுல் தன்னுடைய விருப்பு மற்றும் வெறுப்புகள் அனைத்தையும் கடந்தவராகவும், கடவுள் மற்றும் கடவுள் பணி மட்டுமே தன் இலக்கு என்று உணர்ந்தவராகவும் இருக்கிறார்.

 

‘நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்லர்’ என்று சொல்லித் தம் சீடர்களைத் தனியே அழைத்துக்கொள்கிற இயேசு, ‘பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்லர்’ என்றும், தலைவருக்கு நேர்வதே பணியாளர்களுக்கு நேரும் எனவும் எச்சரிக்கிறார்.

 

வாழ்வின் எந்த நிலையில் இருந்தாலும், நாம் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் என்னும் எண்ணம் நம்மில் வேரூன்றி நின்றால், அவருடைய குரலை நாம் எப்போதும் உணர்ந்துகொள்வோம்.

 

நிற்க.

கடவுளே தலைவர், நாம் பணியாளர்கள் என்னும் வரையறையும் தெளிவாக இருத்தல் வேண்டும். வரையறை தெளிவானால் சலனம் குறையும். சலனம் முறைய உள்ளுணர்வு அதிகரிக்கும். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 89)

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: