
இன்றைய இறைமொழி
திங்கள், 8 டிசம்பர் ’25
புனித கன்னி மரியாவின் அமல உற்பவம், பெருவிழா
தொடக்கநூல் 3:9-15, 20. எபேசியர் 1:3-6, 11-12. லூக்கா 1:26-38
‘அன்னை கன்னி மரியா அமல உற்பவி – பிறப்புநிலைப் பாவம் இல்லாமல் கருவுற்றவர் – என்னும் வழுவாநிலைக் கோட்பாடு, ‘இன்எஃபாஃபிலிஸ் தேயுஸ்’ என்னும் கொள்கைத் திரட்டின் வழியாக 1854-ஆம் ஆண்டு டிசம்பர் 8-ஆம் நாளில் திருத்தந்தை 9-ஆம் பயஸ் அவர்களால் வழங்கப்பட்டது. கிறிஸ்து பிறப்புக்கான தயாரிப்பின் காலமான திருவருகைக்காலத்தில் இப்பெருவிழா கொண்டாடப்படுவது பொருத்தமாக இருக்கிறது. ஏனெனில், அன்னை கன்னி மரியாவின் அமல உற்பவம் கடவுள் மனுவுருவாதலுக்கான தொடக்கமாக இருக்கிறது.
கன்னி மரியின் அமல உற்பவம் பற்றிய குறிப்பு நேரடியாக திருவிவிலியத்தில் இல்லை. ஆனால், திருக்குரானில் ‘ஸூரா மர்யம்’ என்னும் அலகில் ‘மர்யம் பாவ அழுக்கின்றி பிறக்குமாறு கடவுள் அருள்கூர்ந்தார்’ என வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில், திருக்குரானைப் பொருத்தவரையில் இயேசு ஓர் இறைவாக்கினர். இறைவாக்கினர் பாவ அழுக்கின்றிப் பிறப்பவர் என்பதால், அவரைப் பெற்றெடுப்பவர் பாவ அழுக்கில்லாமல் இருக்கிறார் என்பது திருக்குரானின் புரிதல்.
‘பாவமற்ற நிலை, தூய்மை, சுத்தம், அழுக்கற்ற நிலை, அ-மலம்’ என்று இன்றைய நாளில் அன்னை கன்னி மரியாவின் தூய்மையை, புனிதத்தைப் போற்றுகிறோம். இந்தப் புரிதல் இன்றைய நாளுக்குப் பொருந்துமா?
‘தூய்மை என்பது கடவுள்தன்மைக்கு அடுத்த நிலை’ என்று சொல்லி வந்த நாள்கள் கடந்து, இப்போது ‘கறை நல்லது’ (cf. Surf Excel) என்று சொல்ல நாம் பழகிக்கொண்டோம். நாம் பயன்படுத்துகிற டெட்டால், லைசால் போன்றவை கூட 99.9 சதவிகதமே கிருமிகளைக் கொல்கின்றன. கறையோடு இருக்கிற தலைவர்களை நாம் ஏற்றுக்கொள்ளப் பழகிக்கொள்கிறோம். கறையோடு சமரசம் செய்துகொள்கிறோம். அன்னை கன்னி மரியா ‘கறையற்றவர்’ என்று சொல்வது சற்றே அவரை நம்மிடமிருந்து அந்நியப்படுத்துகிறது.
இரண்டாவதாக, ‘தூய்மை’ அல்லது ‘புனிதம்’ என்பதை எப்போதுமே மேன்மை என்று சொல்லிவிடவும் முடியாது. எடுத்துக்காட்டாக, சாலை ஓரத்தில் படுத்துறங்கும் வீடற்ற பெண்ணுக்கும், நாடோடிப் பெண்களுக்கும் அவர்களுடைய அழுக்குதான் அவர்களுக்குப் பாதுகாப்பு. தூய்மையாகவும் சுத்தமாகவும் அவர்கள் இருந்தால் அவர்களுடைய இருத்தலுக்கு அதுவே ஆபத்தாக முடியும். ஆக, ‘அழுக்கும் அழகே’ என்பதே இவர்களுக்கு ஏற்புடைய கருத்துருவாக இருக்கிறது.
ஆக, ‘அன்னை கன்னி மரியா தூய்மையானவர். நாமும் தூய்மையாக இருக்க வேண்டும்’ என்று நம் சிந்தனையைச் சுருக்கிவிட வேண்டாம். அவர்களுடைய தூய்மையின் நோக்கம், அது வழங்குகிற சவால் என்பதை முன்நிறுத்தி நாம் சிந்திப்போம்.
‘சிலர் மேன்மையாகவே பிறக்கிறார்கள். சிலர்மேல் மேன்மை திணிக்கப்படுகிறது. சிலர் மேன்மையை அடைகிறார்கள்’ என்கிறார் ஷேக்ஸ்பியர். அன்னை கன்னி மரியா மேன்மையாகப் பிறக்கிறார். அதே வேளையில் தன்னுடைய சரணாகதி வாழ்க்கையால் மேன்மையை அடைகிறார். சதுரங்க விளையாட்டில் இந்தப் பக்கம் இருக்கிற ‘சிப்பாய்கள்’ பலகையின் அந்தப் பக்கம் சென்றுவிட்டார்கள் என்றால் அவர்கள் வலிமையானவர்களாக மாறுகிறார்கள். ஒவ்வொரு கட்டமாக அவர்கள் நகர்ந்தாலும் அவர்களுடைய விடாமுயற்சி அவர்களை வெற்றியாளர்களாக மாற்றுகிறது.
இன்றைய இரண்டாம் வாசகத்தில், ‘நாம் தூயோராகவும் மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்று முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார் … முன்குறித்து வைத்தார்’ என எழுதுகிறார் பவுல். நம் வாழ்க்கை என்பது வரலாற்று விபத்து அல்ல, மாறாக, அதற்கென ஒரு நோக்கத்தை கடவுள் வரையறுத்துள்ளார் என்பது பவுலின் புரிதலாக இருக்கிறது. அன்னை கன்னி மரியாவுடைய வாழ்க்கையின் நோக்கத்தை வானதூதர் வழியாக கடவுள் வெளிப்படுத்துகிறார் (நற்செய்தி வாசகம்). இதைப் போல, காண்கின்ற, கேட்கின்ற வகைகளில் கடவுள் தம் திருவுளத்தை நமக்கு வெளிப்படுத்துவதில்லை. அக, புற அறிகுறிகளைக் கொண்டே நாம் அதைக் கண்டுகொள்ள வேண்டும்.
நாம் அனைவரும் மேன்மைக்காகப் பிறந்துள்ளோம். மேன்மைக்காகவே கடவுள் நம் அனைவரையும் தேர்ந்தெடுத்து முன்குறித்து வைத்துள்ளார்.
‘பெண்’ என்னும் நிலையில் இருந்த முதல் பெண், ‘தாய்’ (‘ஏவா’) என்னும் நிலைக்கு மாறுவதை இன்றைய முதல் வாசகம் நமக்குக் காட்டுகிறது. பெண்ணின் வித்துக்கும் பாம்பின் வித்துக்குமான பகையை இறையியலாக்கம் செய்து இயேசு கிறிஸ்துவுக்கும் தீமைக்கும் உள்ள பகை என்று நாம் புரிந்துகொள்கிறோம். விவிலிய நிகழ்வை அப்படியே எடுத்துக்கொண்டால், விலக்கப்பட்ட கனியை உண்கிற நிகழ்வு மானிட வாழ்வில் பெரிய மாற்றத்தை உருவாக்குகிறது. கண்கள் திறக்கப்பட்ட நிலைக்கு மானிடம் நுழைகிறது.
நாம் எப்படி இருக்கிறோம் என்பது அல்ல, மாறாக, நாம் எப்படி ஆகிறோம் அல்லது மாறுகிறோம் என்பதே முக்கியமானது. நாம் குழந்தையாக இருந்தபோது, ‘நீ என்ன ஆகப்போகிறாய்?’ என்று மற்றவர்கள் நம்மிடம் கேட்கிறார்கள். நாம் வளர்ந்தவுடன், ‘நீ என்னவாக இருக்கிறாய்’ என்று கேட்கிறார்கள். வளர்ந்தவுடன் ஒரு தேக்கநிலை வந்துவிடுகிறது. தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதே நமக்கு மதிப்பு தருகிறது. பால் தன் இருத்தல் நிலையை விடுத்து தயிர், பாலாடைக்கட்டி, வெண்ணெய், நெய் என மாறும்போதுதான் அதன் மதிப்பு கூடுகிறது. சாதாரண இரும்பு டங்ஸ்டன் இழையாக மாறும்போது அதன் மதிப்பு பல மடங்கு உயர்கிறது.
நாசரேத்தூர் இளம்பெண் என்னும் கன்னி மரியா கடவுளின் தாய் என மாறுகிறார். இந்த மாற்றத்துக்கு அடிப்படையாக இருப்பது அவருடைய அமல உற்பவம். ஆக, மாறிக்கொண்டே இருந்து நம் மதிப்பைக் கூட்ட இன்றைய நாள் நம்மை அழைக்கிறது.
‘இது எப்படி நிகழும்?’ என்னும் கேள்வியிலிருந்து ‘கடவுளால் எல்லாம் நிகழும்’ என்னும் வாக்கியத்திற்குக் கடந்து செல்கிறது நற்செய்தி வாசகம். ‘கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை’ என்று வானதூதர் மொழியக் கேட்ட மரியா, ‘உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்’ என்கிறார். ‘உம் சொற்படியே நான் நிகழ்த்துகிறேன்’ என்று தன்னை முதன்மைப்படுத்தாமல், கடவுள் தன் வாழ்வில் செயல்படுமாறு அனுமதிக்கிறார். பல நேரங்களில் வாழ்வின் நிகழ்வுகளை நாமே தலைமேல் எடுத்துக்கொண்டு நின்று கலக்கமும் கவலையும் அடைகிறோம். பல நேரங்களில் வாழ்வின் நிகழ்வுகள் நம் கைகளுக்குள் நிற்பதில்லை. நிகழ்வுகள் அதன்போக்கில் நடந்துகொண்டிருக்கின்றன. சற்றே நாம் தள்ளி நின்று இறைவன் செயலாற்றுமாறு அனுமதித்தல் நலம்.
கன்னி மரியாவின் தூய்மை கடவுள் அவருக்குக் கொடுத்த கொடை. அந்தக் கொடை செயலாற்றுமாறு அனுமதிக்கிறார் மரியா. ‘கடவுளால் எல்லாம் நிகழும்’ என்பது நம்முடைய நம்பிக்கை அறிக்கையாக இருக்கும்போது நாமும் நிபந்தனையின்றி சரணடைய முடியும்.
இன்றைய நாளில், அன்னை கன்னி மரியாவின் அமல உற்பவத்துக்காக கடவுளுக்கு நன்றிகூறுகிற வேளையில், தூய்மை என்பது அவருடைய தாய்மைக்கான தயார்நிலை என்பதை அறிந்துகொள்வோம்.
வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்கான தயார்நிலையை நாம் பெற்றிருக்கவும், ஒவ்வொரு பொழுதும் மேன்மையை நோக்கி நகரவும், தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கவும், சரணாகதி மனநிலையுடன் வாழ்க்கையை வாழவும் முயற்சி செய்வோம்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Source: Fr. Yesu Karunanidhi
Share: