
இன்றைய இறைமொழி
செவ்வாய், 14 அக்டோபர் ’25
ஆண்டின் பொதுக்காலம் 28-ஆம் வாரம், செவ்வாய்
உரோமையர் 1:16-25. லூக்கா 11:37-41
‘பிறருக்காகத் தம்மையே வெறுமையாக்கும் உள்ளம் அனைத்தையும் தூய்மையாக்கும்’
தூய்மை என்பதை தயார்நிலை என வரையறுக்கலாம். தூய்மையாக இருக்கிற பாத்திரம் உணவு பரிமாறுவதற்குத் தயாராக இருக்கிறது. தூய்மையாக இருக்கிற ஆடை அணிவதற்குத் தயாராக இருக்கிறது. தூய்மையாக இருக்கிற மனிதர் இறைவனை ஏற்பதற்குத் தயாராக இருக்கிறார்.
தூய்மை என்பது சார்புநிலைச் சொல். எனக்குத் தூய்மை எனத் தெரிவது இன்னொருவருக்கு அழுக்கு எனத் தெரியலாம். தூய்மையிலும் நிறைய படிநிலைகள் உள்ளன. முழுவதும் தூய்மை என்பது எட்டாத நிலையாகவே இருக்கிறது. தூய்மை என்பது எல்லா இடத்துக்கும் நேரத்துக்கும் நபருக்கும் ஏற்புடைய மதிப்பீடும் அல்ல. சாலை ஓரங்களில் தூங்குகிற நரிக்குறவப் பெண்களுக்குத் தூய்மை என்பது ஆபத்து. எப்போதும் அழுக்காக இருக்கவே அவர்கள் விரும்புகிறார்கள்.
பரிசேயர் ஒருவர் தம்மோடு உணவருந்தும்படி இயேசுவை அழைக்கிறார். பந்தியில் அமர்கிற இயேசு கை கழுவாததைத் கண்டு பரிசேயர் வியப்படைகிறார். அவருடைய வியப்பு உணர்வையே தூய்மை பற்றிய போதனைக்கான தளமாகப் பயன்படுத்துகிறார் இயேசு.
தூய்மையைப் பற்றிய புரிதலை பரிசேயரும் இயேசுவும் வேறு வேறு நிலைகளில் கொண்டிருந்தார்கள்.
‘பரிசேயர்’ என்னும் சொல் ‘பரிஸ்ஸேய்ன்’ (‘ஒதுக்கிவைக்கப்பட்ட’) மற்ற மக்களிடமிருந்து ‘தூய்மையாக’ ஒதுக்கிவைக்கப்பட்ட என்னும் மூலச் சொல்லிலிருந்து வருகிறது. தங்கள் வாழ்விடம், வழிபாட்டு இடம், ஆடைகள், உடல் ஆகியவற்றில் தூய்மை பேணுவதில் பரிசேயர்கள் மிகுந்த அக்கறை காட்டினார்கள். குறிப்பாக, உணவுக்குப் பயன்படும் காய்கறிகளைப் பயன்படுத்துவதிலும், உணவுப் பாத்திரங்களைக் கையாளுவதிலும் மிகுந்த கவனமாக இருந்தார்கள். சந்தைவெளிகளில் உள்ள புறவினத்தார்கள் கொண்டுவரும் காய்கறிகள் தீட்டானவை எனக் கருதினார்கள். தங்களுக்கு வெளியே உள்ள நபர்களால் தாங்கள் தீட்டாகிவிட்டதாக அவர்கள் எண்ணினார்கள். அவர்களுடைய தூய்மை வெளிப்புறம் சார்ந்ததாகவும் சமய அடிப்படையிலும் இருந்தது.
ஆனால், இயேசுவைப் பொருத்தவரையில் தூய்மை என்பது உள்ளம் சார்ந்தது. தனிநபருக்கும் கடவுளுக்கும் இடையே இருக்கிற உறவு சார்ந்தது. வெளிப்புறத்திலிருந்து உள்ளே செல்பவை அல்ல, மாறாக, உள்ளே இருந்து வெளியே வருபவையே ஒருவரைத் தீட்டாக மாற்றுகின்றன.
பரிசேயருக்கு இயேசு இரண்டு பாடங்களைக் கற்பிக்கிறார்:
(அ) உள்ளத்தின் தீமை, குறிப்பாக, கொள்ளை உணர்வு நீக்கப்பட வேண்டும்.
(ஆ) தர்மம் செய்வதன் வழியாக ஒருவர் அனைத்தையும் தூய்மையாக்க முடியும்.
தர்மம் செய்தல் என்பது பரிசேயர்கள் கடைப்பிடித்த மூன்று வழக்கங்களில் (நோன்பிருத்தல், இறைவேண்டல் செய்வது மற்றவையாகும்) ஒன்று. தர்மம் செய்தல் என்பது செயலாக மாறுவதற்கு முன்னர், அது எண்ணமாக உதித்தல் வேண்டும். இது ஓர் உள்ளார்ந்த செயல். தமக்கு உரியதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும், போதும் என்று எண்ணும், ஆசைகளைக் குறைத்துக்கொள்ளும் உள்ளமே தர்மம் செய்ய முடியும்.
பாத்திரங்களையும் கைகளையும் கழுவித் தூய்மையாக்குதல் எளிது. சிறிது உடலுழைப்பும் தண்ணீரும் மட்டுமே போதும்.
தர்மம் செய்து உள்ளத்தைத் தூய்மையாக்குதல் எளிது அன்று. ஏனெனில், உள்ளத்து விருப்பமும் தொடர் செயலும் இதற்கு அவசியம்.
இன்றைய முதல் வாசகத்தில், ‘நேர்மையுடையோர் தம் நம்பிக்கையால் வாழ்வடைவர்’ என்னும் இறையியல் கருத்துருவைத் தம் வாசகருக்கு அறிமுகம் செய்கிற பவுல், படைப்பின் தொடக்கமுதல் மனிதர்களிடமிருந்த நேர்மையற்ற நிலையை எடுத்துரைக்கிறார்.
நம்மிடம் உள்ளதைப் பிறரோடு பகிரும் செயல் நம் உள்ளத்தையும் உடலையும் தூய்மையாக்கும்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: