இன்றைய இறைமொழி
வியாழன், 21 ஆகஸ்ட் ’25
பொதுக்காலம் 20-ஆம் வாரம், வியாழன்
புனித 10-ஆம் பயஸ் – நினைவு
நீதித்தலைவர்கள் 11:29-39அ. மத்தேயு 22:1-14
திருமண நிகழ்வை ஒட்டி நம் இல்லங்களில் சொந்த பந்தங்களுக்கு ஆடைகள் எடுக்கும் வழக்கம் நம் ஊர்களில் இன்னும் உள்ளது. சிலர் தாங்களே ஆடைகள் எடுத்துக் கொடுக்கின்றனர். இன்னும் சிலர் ஆடைகளுக்குரிய பணத்தைக் கொடுத்து ஆடைகள் எடுத்துக்கொள்ளுமாறு சொல்கின்றனர். திருமணத்திற்கென்று எடுத்த ஆடைகளை அணிந்து வருவது திருமண வீட்டாரால் எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது சிலர் திருமண வீட்டார்மேல் உள்ள கசப்புணர்வைக் காட்டுவதற்காக, அவர்கள் எடுத்துக்கொடுத்த ஆடையை அணிய மறுத்து, தாங்கள் விரும்பும் ஆடையில் செல்வதுண்டு. தாங்கள் கொடுத்த ஆடையை நிராகரித்த அவர்கள்மேல் மணவீட்டாருக்குக் கசப்புணர்வு இன்னும் அதிகமாகவே செய்கின்றது.
விண்ணரசு பற்றிய திராட்சைத் தோட்ட எடுத்துக்காட்டைத் தொடர்ந்து, இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு, திருமண விருந்து எடுத்துக்காட்டைத் தருகின்றார். நேற்றைய எடுத்துக்காட்டின் நிறைவுப் பகுதி நமக்கு இடறலாக இருந்ததுபோல, இன்றைய எடுத்துக்காட்டின் நிறைவுப் பகுதியும் இடறலாக இருக்கிறது.
திருமண ஆடை அணியாத ஒருவனைக் காணும் அரசர், ‘தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்?’ எனக் கேட்டு, இருளில் தள்ளுகின்றார்.
அழைத்தவர்கள் அனைவரும் வர மறுக்கின்றனர். அவர்கள் தீக்கிரையாக்கப்படுகின்றனர்.
வந்தவர்களில் ஒருவர் திருமண ஆடை இன்றி ஒருவர் வருகின்றார். அவர் இருளில் தள்ளப்படுகின்றார்.
இங்கே இரண்டு விடயங்கள் புரிதலுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை:
(அ) அழைத்தலை நிராகரிப்பதும் தவறு
அழைத்தலை நிராகரித்தவர்கள் அரசனை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. அவர்களது முதன்மைகள் வேறாக இருந்தன.
(ஆ) அழைத்தலுக்கு நம்மைத் தகுதியாக்க மறுப்பதும் தவறு
அழைத்தல் பெற்று விருந்தில் பங்கேற்றவர்களுள் ஒருவர், தனக்குக் கொடுக்கப்பட்ட விருந்து ஆடையை அணியை மறுக்கின்றார். ஆக, அவரும் அரசனை ஒரு பொருட்டாகக் கருதவில்லை.
மனித வாழ்வில், ‘அதிகாரம்’ என்பது அந்த அதிகாரத்தை ஏற்க ஒருவர் இருக்கும் வரைதான். ஒருவருடைய அதிகாரத்தை நான் ஏற்க மறுத்தால் அவர் என்மேல் அதிகாரம் செலுத்த முடியாது. ஆனால், இங்கே, அரசர் அனைவர்மேலும் அதிகாரம் பெற்றவராக இருக்கின்றார்.
‘திருமண ஆடை’ என்பதை நாம் இங்கே உருவகமாகவே புரிந்துகொள்ள வேண்டும். தகுதியான அல்லது தகுதிப்படுத்தப்பட்ட வாழ்வே திருமண ஆடை. மத்தேயு குழுமத்தில் நிலவிய ஒரு பிரச்சினைக்கான தீர்வையே நாம் இங்கே காண்கிறோம். கிறிஸ்தவ நம்பிக்கையைத் தழுவுதல் என்பது தானாகவே நடக்கும் ஒரு செயல் அல்ல. மாறாக, அந்த நம்பிக்கைக்கு ஒருவர் தன்னைத் தயார்படுத்த வேண்டும்.
நேற்றைய உவமையோடு இதை ஒப்பிட்டால்,
ஏணியில் ஏறுவது ஓர் அழைப்பு என்றால், அந்த அழைப்பிற்கு ஒருவர் தன்னையே தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். தகுதிப்படுத்தவில்லை என்றால், அவர் கீழே விழ வாய்ப்பு உண்டு.
தகுதிப்படுத்துதல் சிறிய அளவில்தான் தொடங்க வேண்டும். திருமண ஆடை அணிதல் போல.
ஏனெனில், ‘சிறியவற்றைப் புறக்கணிப்போர் சிறிது சிறிதாய் வீழ்ச்சி அடைவர்’ (காண். சீஞா 19:1)
கிறிஸ்தவ வாழ்வில், திருமுழுக்கின்போது நமக்கு வழங்கப்படும் ‘வெள்ளைநிற ஆடை’ என்பது நம் திருமண ஆடை. இந்த ஆடை நமக்குக் கொடையாக வழங்கப்பட்டாலும், அந்த ஆடையை அணிய நான் என்னைத் தகுதிப்படுத்த வேண்டும்.
அருள்பணியாளர்களாகிய நாங்கள் அணியும் வெள்ளை அங்கி, அல்லது துறவற சபையில் இருப்பவர்களின் ஆடைகள் என அனைத்தும் திருமண விருந்து ஆடைகளே. இவை கொடையாகக் கொடுக்கப்பட்டாலும், இந்த ஆடைகளை அணியும்போதுதான், எங்களையே திருமண விருந்திற்குத் தகுதியாக்கிக் கொள்ள முடியும். வெறுமனே ஆடைகள் அணிதல் அல்ல. மாறாக, ஆடைக்குரிய வாழ்க்கை முறையைத் தகவமைத்துக்கொள்தல்.
சேறும் சகதியும் தூசியுமாய் வந்த தன் இளைய மகன்மேல் புதிய ஆடையைப் போர்த்திய இரக்கத்தின் இறைவன், புதிய ஆடையை அணிய மறுத்தால் நீதியுள்ள இறைவனாக நம்மைத் தண்டிப்பார் என்பதை நினைவுபடுத்துகிறது நற்செய்தி வாசகம்.
இன்றைய முதல் வாசகத்தில் சோகமான நிகழ்வு ஒன்றை வாசிக்கிறோம். நீதித்தலைவரான இப்தாவின் அவசர மனநிலை அவருடைய மகளின் உயிரைப் பறிக்கிறது. ஆண்டவராகிய கடவுளின் இரக்கத்தின்மேல் நம்பிக்கை கொள்ளாமல் தன் முயற்சி மேலும், தன் செயல்கள்மேலும் அதீத நம்பிக்கை கொண்டவராக இருக்கிறார் இப்தா. இறைவனின் திருமுன்னிலையில் மிகச் சில சொற்களே நாம் சொல்ல வேண்டும். அளவுக்கு அதிகமான பேச்சு நமக்கே ஆபத்தாக முடியும்.
இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரத்தில் ஜூஸப்பே சார்த்தோ என்று பிறந்து திருஅவையின் 257-ஆவது திருத்தந்தையாக உயர்ந்தவர் புனித 10-ஆம் பயஸ் (1835-1914). ஒரு பங்குப் பணியாளராகத் தன் பணியைத் தொடங்கினார். மேய்ப்புப் பணி அக்கறையோடு திருஅவையை வழிநடத்திய இவர் ‘நற்கருணையின் திருத்தந்தை’ என அழைக்கப்படுகிறார். அடிக்கடி நற்கருணை உட்கொள்வது, குழந்தைகளுக்கு புது நன்மை வழங்குதல் போன்றவற்றின் வழியாக நற்கருணையின் அருளை அனைவருக்கும் திறந்துவிட்டவர் இவர். எளிமையான வாழ்க்கைமுறை, நம்பிக்கையைக் காப்பதற்கான துணிவு, நற்கருணைமேல் அதீத அன்பு ஆகியவை இவரிடம் நாம் கற்கும் பாடங்கள்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: