இன்றைய இறைமொழி
புதன், 30 ஜூலை ’25
பொதுக்காலம் 17-ஆம் வாரம், புதன்
விடுதலைப் பயணம் 34:29-35. மத்தேயு 13:44-46
விண்ணரசு பற்றிய உவமைகளைத் தொடர்கின்ற இயேசு, விண்ணரசை புதையல் மற்றும் முத்துக்கு ஒப்பிடுகின்றார்.
நிலத்தில் புதையல் இருப்பதைக் காண்கிறார் ஒருவர். புதையலை அப்படியே எடுத்துச் செல்வதை விடுத்து அதை மீண்டும் புதைத்துவிட்டுச் சென்று, தமக்குள்ள அனைத்தையும் விற்று நிலத்தை வாங்கிக்கொள்கின்றார். இங்கே நமக்கு ஒரு கேள்வி எழலாம். ‘புதையலை மட்டும் அவர் எடுத்துச் சென்றிருந்தால் என்ன?’ இயேசுவின் சமகாலத்தில் நிலங்களில் நிறையப் புதையல்கள் கண்டெடுக்கப்பட்டன. அதாவது, நாடுகடத்தல், போர், வன்முறை, திருட்டு ஆகியவற்றுக்கு அஞ்சிய மக்கள் தங்களிடம் உள்ள பணம் (நாணயம்) மற்றும் அணிகலன்களைப் பானையில் வைத்து நிலத்தில் புதைப்பது வழக்கம். அப்படிப் புதைக்கப்பட்ட பல காலப்போக்கில் மறக்கப்பட்டன. அல்லது மறைந்து போயின. நிலத்தை உழும்போது புதையல்கள் பெரும்பாலும் கண்டெடுக்கப்பட்டன. நிலத்தை உழுதுகொண்டிருக்கின்ற நபரின் ஏரில் புதையல் தென்பட்டவுடன், அவர் அதை எடுத்துக்கொண்டால் அது திருட்டு என்று கருதப்படும். ஏனெனில், நிலம் வேறொருவருக்கு உரியது. ஆக, உழுபவர் என்ன செய்கிறார் தன்னிடம் உள்ள அனைத்தையும் விற்று அந்த நிலத்தையும், பின்னர் அந்தப் புதையலையும் சொந்தமாக்கிக் கொள்கின்றார்.
ஆக, இறையாட்சி என்பது திருடப்பட வேண்டியது அல்ல. மாறாக, உரிமையாக்கிக்கொள்ள வேண்டியது. அதை உரிமையாக்கிக் கொள்ள ஒருவர் தன்னிடம் உள்ள அனைத்தையும் முழுமையாக இழக்க முன்வர வேண்டும். நிலத்தை உழுபவர் அந்த நிலத்தை உரிமையாக்க வேண்டும் என்றால் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டும்.
இரண்டாவது, விலையுயர்ந்த முத்து.
முத்துக்களைச் சேகரிப்பதையும் விற்பதையும் சில வணிகர்கள் முன்னெடுத்தனர். நல்முத்துக்களை தேடிச் செல்கின்ற வணிகர் அதைக் கண்டவுடன், தன்னிடம் உள்ள யாவற்றையும் விற்று அதை வாங்கிக்கொள்கின்றார். அதாவது, மற்ற முத்துக்களை அவர் இழந்தால்தான் இந்த முத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த முத்து அவருக்கு மதிப்புக்குரியதாக இருக்கும். ஆக, மதிப்புக்குரிய ஒன்றைத் தனதாக்கிக் கொள்ளவும், முதன்மையாக்கிக்கொள்ளவும், தன்னுடைய மற்ற முதன்மைகளை அவர் இழக்க முன்வர வேண்டும்.
ஆக, விண்ணரசு முழுமையாக உரிமையாக்கப்படவும், முதன்மையானதாகத் தெரிந்துகொள்ளப்படவும் வேண்டும்.
அப்படி என்றால், பாதிப் பாதியான அணுகுமுறையும், பலவற்றில் ஒன்ற என்ற மனநிலையும் இறையாட்சிக்கு ஏற்ற மனநிலை அல்ல.
முழுமையாக உரிமையாக்கிக் கொள்ள நமக்குத் தடையாக இருப்பது எது? ஒருவேளை புதையல் வெறும் செல்லாக் காசுகளாக இருந்தால் என்ன ஆவது? என்ற பயம்.
முதன்மையாக உரிமையாக்கிக்கொள்ள நமக்குத் தடையாக இருப்பது எது? மதிப்புக்குரிய முத்தைத் தேடிச் செல்லாமல் இருப்பதே போதும் என்ற தேக்க மனநிலை கொள்வது. அல்லது மதிப்புக்குரிய ஒன்றைக் கண்டாலும் மதிப்பற்றவற்றை இழக்கும் ஆர்வமும் துணிவும் இல்லாமல் இருப்பது.
முதல் வாசகத்தில், மோசேயின் பெற்ற கடவுள் அனுபவத்தின் தாக்கம் அவருடைய முகத்தில் ஒளிர்வதை நாம் காண்கிறோம். நெருப்பின் நடுவில் இருக்கிற இரும்புத் துண்டு நெருப்பின் இயல்பைப் பெற்றுக்கொள்வதுபோல கடவுளின் அருகில் இருக்கிற மோசே கடவுளின் ஒளியைப் பிரதிபலிக்கிறார். கடவுளின் தூய்மைநிறை திருமுன்னிலை மோசேயைப் பற்றிக்கொள்கிறது. இது விரைவில் மக்களையும் பற்றிக்கொள்ளும்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: