• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

புனித லொயோலா இஞ்ஞாசியார். இன்றைய இறைமொழி. வியாழன், 31 ஜூலை ’25.

Thursday, July 31, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

விண்ணரசு உவமைகள் புனித லொயோலா இஞ்ஞாசியார் இயேசு சபை இறைவனின் அதிமிகு மகிமைக்கே மீன் வலை உவமை வீட்டு உரிமையாளர் உவமை விண்ணரசு கடவுள் சந்திப்புக் கூடாரம் ஆன்மீகப் பயிற்சி மேலாண்மையியல் உடல்சார் கட்டுகள் உறவுசார் கட்டுகள் கட்டின்மை

இன்றைய இறைமொழி
வியாழன், 31 ஜூலை ’25
பொதுக்காலம் 17-ஆம் வாரம், வியாழன்
புனித லொயோலா இஞ்ஞாசியார், நினைவு
விடுதலைப் பயணம் 40:16-21, 34-38. மத்தேயு 13:47-53

 

புதியவற்றையும் பழையவற்றையும்

 

விடுதலைப் பயண நூலின் இறுதிப்பகுதியை இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கிறோம். ஆண்டவராகிய கடவுளின் கட்டளைக்கிணங்க மோசே சந்திப்புக் கூடாரத்தை உருவாக்குகிறார். ஆண்டவரின் மாட்சி சந்திப்புக் கூடாரத்தின்மேல் இறங்கி வந்து அங்கே குடிகொள்கிறது. ‘ஆண்டவர் உங்களைச் சந்திக்க வருவார்’ என்னும் யோசேப்பின் வாக்குறுதியோடு தொடக்கநூல் நிறைவுபெறுகிறது. இஸ்ரயேல் மக்களைச் சந்திக்க வந்த ஆண்டவர் அவர்களை எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து விடுவத்து, அவர்களோடு தங்குகிறார். கடவுள் மானிடரின் அருகில் நெருங்கி வருகிறார். சந்திப்புக் கூடாரத்தில் இறங்கி வந்த கடவுளின் மாட்சியின் பின்புலத்தில்தான் யோவான் நற்செய்தியாளர் தன் முகவுரையில், ‘வாக்கு மனிதர் ஆனார். நம்மிடையே கூடாரம் அடித்தார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம்’ (காண். யோவா 1:14) என எழுதுகிறார்.

 

கடலில் வீசப்படும் வலையை விண்ணரசுக்கு எடுத்துக்காட்டாக மொழிகிறார் இயேசு. தொடர்ந்து, தாம் பேசுகிற உவமைகள் அனைத்தையும் புரிந்துகொள்கிற எவரும் தம் கருவூலத்திலிருந்து பழையவற்றையும் புதியவற்றையும் வெளிக்கொணர்கிற வீட்டு உரிமையாளர் போன்றவர் என எழுதுகிறார். மேலும், விண்ணரசு என்பது கற்றுக்கொள்ளப்பட வேண்டியது எனவும் இயேசு இங்கே குறிப்பிடுகிறார்.

 

ஆண்டவராகிய கடவுள் சந்திப்புக் கூடாரத்தில் இறங்கி வருகிறார் என்பது புதியது. ஆனால், அதே வேளையில் அவர் என்றும் மக்களோடு இருக்கிறார் என்பது பழையது. புதியவை மொழியப்பட்டாலும் பழையவை மதிப்பு கொண்டுள்ளன. புதியனவற்றையும் பழையனவற்றையும் பகுத்தாய்ந்து செயல்படுகிற வீட்டு உரிமையாளர்போல நாம் இருக்கிறோம். நாம் ஒவ்வொரு நாளும் புதிய நாளுக்குள் நுழைந்தாலும் புதிய நபராகப் பிறந்தாலும், பழைய நாளின் பழைய நபரின் நிழல் நம்மைத் தொடரவே செய்கிறது. புதியனவற்றையும் பழையனவற்றையும் தேர்ந்து தெளிந்து இரண்டிலும் நல்லவற்றைத் தழுவிக்கொண்டு, அல்லவற்றை விட்டுவிடுதல் நலம்.

 

‘மாஜிஸ்’ – ‘ஆத் மெயோரெம் தெய் க்ளோரியாம்’ – ‘இறைவனின் அதிமிகு மகிமைக்கே’ என்னும் வாக்கியத்தை தன் வாழ்வாக்கி, தான் தோற்றுவித்த ‘இயேசு சபையின்’ இலக்கு வாக்கியமாக நிர்ணியத்துச் சென்ற, லொயோலா நகர் புனித இஞ்ஞாசியாரின் (இனிகோ) திருநாளை இன்று கொண்டாடுகின்றோம்.

 

‘மாஜிஸ்’ என்ற ஒற்றைச் சொல்லை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

 

இது வெறும் வார்த்தையல்ல. இது ஒரு தத்துவம். கிறிஸ்துவுக்காக அதிகம் செய்வது. அப்படிச் செய்வது என்றால் மற்றவர்களுக்கு அதிகம் செய்வது. இது ஒருவரை உந்தித் தள்ளக் கூடிய எந்திரம், மந்திரம். கிறிஸ்துவை மையமாக வைத்து உருவாகவிருக்கும் ஒரு சமூகத்திற்கான முதற்படி.

 

‘புனித இஞ்ஞாசியாரின் ஆன்மிகப் பயிற்சிகளில்’ தியானம் செய்பவர் தன்னையே இப்படிக் கேட்பார்: ‘நான் கிறிஸ்துவுக்காக என்ன செய்தேன்? கிறிஸ்துவுக்காக என்ன செய்கிறேன்? கிறிஸ்துவுக்காக நான் என்ன செய்ய வேண்டும்?’ இனிகோவைப் பொருத்தவரையில் ஒருவர் எந்த அளவுக்குக் கிறிஸ்துவை அறிகிறாரோ, அந்த அளவுக்கு அவர் கிறிஸ்துவை அன்பு செய்வார், அந்த நெருக்கத்தில் கிறிஸ்துவைப் பின்பற்றுவார். பயிற்சிகள் முழுவதும் ஒருவர் கேட்கக் கூடிய வரமும் இதுவே: கிறிஸ்துவை இன்னும் நெருக்கமாகப் பின்பற்றுவது. அல்லது கடவுளுக்கு உகந்ததைச் செய்வது. நாம் எதற்காகப் படைக்கப்பட்டோமோ அதை அடையும் வரை நாம் ஓய்ந்துவிடக் கூடாது என்பது இனிகோவின் அறிவுரை. ‘மாஜிஸ்’ (இன்னும் கொஞ்சம் அல்லது இன்னும் மேலாக) என்பது ஆன்மிகப் பயிற்சிகளில் அடிக்கடி வருகின்ற ஒரு வார்த்தை.

 

இன்று மேலாண்மையியலில் தலைமைத்துவப் பாடமாகவும் இது கருதப்படுகிறது.

 

‘இன்னும் கொஞ்சம்’ எக்ஸ்ட்ரா செய்வதில்தான் நம் வாழ்க்கையும் ஆன்மிகமும் அடங்கியுள்ளது. ‘இன்னும் கொஞ்சம்’ என்று நாம் நடக்க, நடக்க பாதை விரியும் என்பதுதான் வாழ்வியல் எதார்த்தம்.

 

‘இன்னும் கொஞ்சம்’ நடக்க வேண்டும் எனில் நமக்கு முதலில் தேவை ‘கட்டின்மை.’ நம் ஆன்மிக வாழ்க்கை இந்த ஒற்றைச் சொல்லில் கட்டப்பட்டுள்ளது என்கிறார் இனிகோ. கட்டின்மை அடையும் ஒருவரே எளிதில் எதையும் தேர்ந்து தெளிய முடியும். அல்லது அவர் தன் உடல்சார் அல்லது உறவுசார் கட்டுக்களுக்குக் கட்டுப்பட்டே முடிவுகள் எடுப்பார்.

 

கடவுளை அனைத்திலும் நாம் காண வேண்டும் எனில் நாம் கட்டின்மையோடு இருக்க வேண்டும். கட்டின்மையோடு இருக்க நம் உளத்தை அவரிடம் சராணதி ஆக்க வேண்டும். நம்மிடம் இருக்கும் அனைத்தையும், நம்முடையது என அழைக்கும் அனைத்தையும் அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

 

‘எடுத்துக் கொள்ளும் ஆண்டவரே! என் கட்டின்மை, என் நினைவு, என் புரிதல், என் உளம், என்னிடம் இருக்கும் அனைத்தையும், நான் உடைமையாக்கிய அனைத்தையும் எடுத்துக்கொள்ளும்! இவை அனைத்தும் நீர் எனக்குக் கொடுத்தவையே! உம்மிடமே அவற்றை நான் ஒப்படைக்கிறேன்! அனைத்தும் உம்முடையதே! உம் திருவுளப்படியே அவற்றைப் பயன்படுத்தும். உம் அன்பையும் அருளையும் எனக்குத் தாரும்! அதுவே எனக்குப் போதும்!’

– புனித இனிகோ

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: