• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

சிறியவற்றில் நம்பிக்கைக்குரியவராய். இன்றைய இறைமொழி. சனி, 30 ஆகஸ்ட் ’25.

Saturday, August 30, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

கடவுள்-பிரமாணிக்கம் முற்சார்பு எண்ணம் உணர்வுகள் தங்கும் இடம் தாலந்து எடுத்துக்காட்டு விருப்ப நிலை எண்ணம் சுயஎண்ணம் நம்பிக்கைக்குரிய பணியாளர் தகுதியாராய்ச்சி எண்ணம் விழிப்பாயிருத்தல் பிரமாணிக்கம் பணிசெய்தல் வரையறை தாலந்து உவமை

இன்றைய இறைமொழி
சனி, 30 ஆகஸ்ட் ’25
பொதுக்காலம் 21-ஆம் வாரம், சனி
1 தெசலோனிக்கர் 4:9-11. மத்தேயு 25:14-30

 

சிறியவற்றில் நம்பிக்கைக்குரியவராய்

 

‘விழிப்பாயிருந்து உன் இதயத்தைக் காவல் செய். ஏனெனில், அதனின்று பிறப்பவை உன் வாழ்க்கையின் போக்கை உறுதி செய்யும்’ (நீமொ 4:23) என்னும் நீதிமொழிகள் நூல் ஆசிரியரின் சொற்கள் இன்றைய நற்செய்தியில் நாம் காணும் தாலந்து எடுத்துக்காட்டைப் புரிந்துகொள்ள உதவுகின்றன. முதலில் இவரின் சொற்களைப் புரிந்துகொள்வோம். முதல் ஏற்பாட்டுக் காலத்தில், ‘இதயம்’ என்பது ‘உணர்வுகள் தங்கும் இடத்தை’ குறித்தது. அதாவது, இன்று நாம் மனம் அல்லது மூளை அல்லது எண்ணம் என்று சொல்வதை முன்னோர் ‘இதயம்’ என்று குறிப்பிட்டனர். இதன் பின்புலத்தில்தான் ‘அன்பு’ அல்லது ‘காதல்’ என்னும் உணர்வைக் குறிக்க ‘இதயம்’ என்ற குறியீடு பயன்படுத்தப்படுகின்றது. ஆனால், மருத்துவ உலகைப் பொருத்தவரையில் ‘இதயம்’ என்பது இரத்தத்தை சுத்திகரிக்கும் மற்றும் சுழற்சி செய்யும் இடம். நம் உள்ளத்தில் எழும் எண்ணங்களைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனச் சொல்கின்றார் ஆசிரியர். நம் எண்ணங்களை இரு குழுக்களில் அடக்கலாம். சில நேரங்களில் எண்ணங்கள் தாமாகவே உருவாகின்றன. எடுத்துக்காட்டாக, சமையல் செய்துகொண்டிருக்கும் நேரத்தில் திடீரென நாம் காலையில் துணிகளைக் காயப் போட்டதோ, அல்லது கடந்த மாதம் தவணை செலுத்த மறந்ததோ, அல்லது ஏதோ ஒரு புதிய யோசனையோ எழுகின்றது. இதை உளவியல் ‘விருப்ப நிலை எண்ணம்’ என்கிறது. இவற்றை நாம் கட்டுப்படுத்த இயலாது. விருப்ப நிலை எண்ணம் மாறிக்கொண்டே இருக்கும். இது நம் உள்ளுணர்வின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். இரண்டாம் வகை எண்ணம், நாமாகவே விரும்பி நினைப்பது. அல்லது சிந்திப்பது. எடுத்துக்காட்டாக, இந்த மறையுரைச் சிந்தனையில் நான் என்ன எழுத வேண்டும் என்பதை நானாகவே யோசித்து, சிந்தித்து, மனதில் எண்ணங்களை உருவாக்குவது. நீதிமொழிகள் நூல் ஆசிரியர், இரண்டாம் வகை எண்ணங்களைக் குறித்தே கவனமாக இருக்குமாறு நம்மை எச்சரிக்கின்றார். ஏனெனில், இவையே செயல்களாக மாறி நம் வாழ்க்கையின் போக்கை மாற்றுகின்றன.

 

தூர நாட்டிற்குப் பயணம் செய்யும் ஒருவர் தன் பணியாளர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டுச் செல்வது, நெடும் பயணம் மேற்கொள்ளும் அரசர் தன் அமைச்சர்கள் மற்றும் பணியாளர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்து அவர்களைச் சோதிப்பதும் எல்லா இடங்களிலும் காணக் கூடிய ஓர் எதார்த்தம். இந்த எதார்த்தத்தின் பின்புலத்தில் விண்ணரசு பற்றிய கருத்துரு ஒன்றை முன்மொழிகின்றார் இயேசு.

 

நிகழ்வின்படி ஒருவர் தம் பணியாளர்களிடம் அவரவர் திறமைக்கு ஏற்ப ஐந்து, இரண்டு, ஒன்று என்று தாலந்தை வழங்குகின்றார். இங்கே தலைவர் தம் பணியாளர்களின் திறமையை எப்படி ஆராய்ந்து பார்த்தார் என்பதும், ஏன் அவ்வாறு செய்தார் என்பதும் கொடுக்கப்படவில்லை. தலைவர் தான் விரும்பியதைச் செய்கின்றார். சில நேரங்களில் எல்லாருக்கும் ஒரு தெனாரியம் கொடுப்பார். சில நேரங்களில் தகுதிக்கு ஏற்பக் கொடுப்பார். அவர் தலைவர்! பணம் அவருடையது! அவ்வளவுதான்!

 

ஐந்து மற்றும் இரண்டு தாலந்து பெற்றவர்கள் வணிகம் செய்யப் புறப்படுகின்றனர். ஒரு தாலந்து பெற்றவரோ அதைப் புதைத்து வைக்க நிலத்தைத் தேடிப் போகின்றார். மற்றவர்களின் தாலந்துகள் நிலத்துக்கு மேலே இருக்கின்றன. இவருடைய தாலந்தோ நிலத்துக்குக் கீழே இருக்கின்றது. தன் தலைவர் தனக்கு அளித்ததைப் பார்க்கக் கூட விரும்பவில்லை இவர். தன் தலைவர் தன் திறமையைக் குறைத்து மதிப்பிட்டார் என்னும் கோபமா? அல்லது மற்றவர்களோடு தன்னை ஒப்பிட்டுப் பார்த்து, ‘இந்த ஒரு தாலந்தை வைத்து ஒன்றும் செய்ய முடியாது’ என்று அவர் அடைந்த மனச்சோர்வா? இவருடைய செயலின் காரணம் நமக்கு இப்போது தெரியவில்லை. பின்னரே தெரிகிறது.

 

திரும்பி வந்த தலைவர், தன் பணியாளர்களிடம் கணக்குக் கேட்கின்றார். ஐந்து மற்றும் இரண்டு பெற்றவர்கள் அவற்றை இரு மடங்காகப் பெருக்குகின்றனர். தலைவர் அவர்களிடம், ‘நன்று. நம்பிக்கைக்குரிய பணியாளரே’ என்று பாராட்டி, ‘சிறியவற்றில் அவர்கள் காட்டிய நம்பிக்கைக்காக’ பெரிய பொறுப்புகளில் அவர்களை நியமிக்கின்றார். ஒரு தாலந்து பெற்றவர் அதை அப்படியே நீட்டுகின்றார். நீட்டும்போது தன் செயலின் காரணத்தை அவரே மொழிகின்றார்: ‘ஐயா, நீர் கடின உள்ளத்தினர். நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர். நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர். உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்.’

 

இவரின் வார்த்தைகளிலிருந்து மூன்று விடயங்களை நாம் ஊகிக்க முடியும்: (அ) இவர் தலைவரை விமர்சனம் அல்லது தகுதியாராய்ச்சி செய்கின்றார். தன்னால் இதைப் பெருக்க இயலுமா என நினைப்பதை மறுத்து தனக்கு இதை வழங்கியவரையும் அவருடைய உளப்பாங்கையும் ஆய்ந்து பார்க்கின்றார். (ஆ) இவர் தலைவரைப் பற்றி முற்சார்பு எண்ணம் கொண்டிருக்கின்றார். தன் தலைவர் இப்படித்தான் என்றும், இப்படி இருப்பவர் என்றும் அப்படியே இருப்பார் என்றும் நினைக்கின்றார். (இ) தாலந்தைப் பெருக்கும் முயற்சியில் தான் அதை இழந்து விடுவோமோ என்று அச்சம் கொள்கின்றார். இதை பொருளியலில் (Economics) ‘லாஸ் அவெர்ஷன் ஃபேலஸ்ஸி’ (Loss Aversion Fallacy) என அழைக்கின்றார்கள். தாலந்துகள் பெருகினால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என அவர் நினைப்பதற்குப் பதிலாக, இத்தாலந்து சுருங்கிவிட்டால் கவலைப்பட வேண்டுமே என நினைப்பதுதான் ‘லாஸ் அவெர்ஷன் ஃபேலஸ்ஸி’.

 

மொத்தத்தில், ‘விழிப்பாயிருந்து தன் இதயத்தைக் காவல் செய்ய’ மறந்துவிட்டார் இப்பணியாளர். விளைவு, அவர் நினைத்த எண்ணங்களே அவருடைய வாழ்க்கையின் போக்கை மாற்றுகின்றன. அவரிடம் உள்ளதும் எடுக்கப்பட்டு, புறம்பேயுள்ள இருளில் அவர் தள்ளப்படுகின்றார்.

 

மேலும், இப்பணியாளர் சிறியவற்றில் நம்பிக்கைக்குரியவராய் இருக்கவும் தவறிவிட்டார். சீராக்கின் ஞானநூல் ஆசிரியர், ‘சிறியவற்றைப் புறக்கணிப்போர் சிறிது சிறிதாய் வீழ்ச்சியடைவர்’ (சீஞா 19:1) என எச்சரிக்கின்றார்.

 

இன்றைய நற்செய்தி நமக்குத் தரும் பாடங்கள் எவை?

 

(அ) நம் இதயத்தில் எழும் எண்ணங்களைப் பற்றி நாம் விழிப்பாயிருத்தல் அவசியம். ஏனெனில், அவையே நம்மைச் செயல்பாட்டுக்கு இட்டுச் செல்கின்றன. எடுத்துக்காட்டாக, கொலை, கொள்ளை, வன்மம் போன்ற செயல்கள் எல்லாம் முதலில் எண்ணங்களாகவே தொடங்குகின்றன.

 

(ஆ) சிறியவற்றிலும் பிரமாணிக்கம் அவசியம். கணவன்-மனைவி உறவு நிலை பிரமாணிக்கத்திலோ, அல்லது கடவுள்-அருள்பணியாளர் பிரமாணிக்கத்திலோ, ‘சின்ன விடயம்தானே இது! கடவுள் இதை மன்னிக்க மாட்டாரா?’ என்ற எண்ணமே பெரிய தவறுகளுக்கு நம்மை இட்டுச் செல்கின்றது.

 

(இ) அவரவருக்குக் குறிக்கப்பட்ட வேலையைச் செய்வது. மூன்றாவது பணியாளர் தான் ஒரு பணியாளர் என்ற வரையறையை மறந்து, தன்னைத் தலைவர்போல எண்ணிக் கொள்கின்றார். சில நேரங்களில் நம் வேலைகளைச் செய்வது மட்டுமே வாழ்க்கை நமக்கு வழங்கும் வரையறையாக இருக்கிறது.

 

இன்றைய முதல் வாசகத்தில் (காண். 1 கொரி 1:26-31), ‘நீங்கள் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப் பாருங்கள்’ எனக் கொரிந்து நகரத் திருஅவையாருக்கு நினைவூட்டுகின்றார் பவுல். நாம் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப்பார்ப்பதும் நலம்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: